Sunday, 24 February 2013

ஆன்மாவால் இருவரும் ஒருவரே


மகான் ஸத்குரு சேஷாத்ரி சுவாமிகள் ஆன்மீகத்தின் மிக உயர் நிலையில் இருந்தவர். ஆரம்பத்தில் சேஷாத்ரி சுவாமிகளை பக்தர்கள் ‘பெரிய சேஷாத்ரி’ என்றும், பகவான் ரமணரை “சின்ன சேஷாத்ரி’ என்றும் அழைத்தனர். பக்தரல்லாத சிலர் சேஷாத்ரி சுவாமிகளை ’பெரிய பைத்தியம்’ என்றும் ரமணரை ’சின்ன பைத்தியம்’ என்றும் சொன்னதுண்டு. பகவான் ரமணரே கூட ஒருமுறை அண்ணாமலையில் மூன்று பைத்தியங்கள் இருக்கிறார்கள். ஒருவர் அருணாசலேஸ்வரர்; இரண்டாமவர், சேஷாத்ரி சுவாமிகள். மூன்றாவது தான் தான் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சில பக்தர்கள் ரமணரை மூலவர் என்றும், சேஷாத்ரி சுவாமிகளை உற்சவர் என்றும் அழைப்பது வழக்கம். காரணம் ரமணர் ஒரே இடத்தில் நிலையாக இருப்பார். மூலவர் போல். ஆனால் சேஷாத்ரி சுவாமிகளோ உற்சவ மூர்த்தி போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பார்.

ஒரு நாள்.. ரமண பக்தர் ஒருவர் ஆலயத்திற்குச் சென்றார். அங்கே சிவகங்கைக் குளத்தருகே சேஷாத்ரி சுவாமிகள் உட்கார்ந்திருந்தார். ரமணர் எப்படி இருப்பாரோ அதே போன்ற தோற்றத்தில், பத்மாசனமிட்டு, ஆடாது, அசையாது, கண்கள் எங்கோ நோக்கிக் கொண்டிருக்க, மகான் வீற்றிருந்தார்.

பக்தர் ஆச்சர்யத்துடன் மகானை வணங்கி “ரமணர் மாதிரியே நிஷ்டையில் இருக்கிறீர்களே, சுவாமி!” என்றார்.

உடனே சேஷாத்ரி சுவாமிகள் அதற்கு, ”அங்கே ஆனால் என்ன, இங்கே ஆனால் என்ன? எல்லாம் ஒண்ணு தான், போடா!” என்றார்.

உருவத்தில் தான் இரண்டு பேரும் வேறுபட்டிருக்கிறார்களே தவிர, உள்ளத்தால், ஆன்மாவால் இருவரும் ஒருவரே என்று உணர்ந்த பக்தர், மகானை வணங்கிச் சென்றார்.
மூச்சு பயிற்சி
தியான பயிற்சி


No comments:

Post a Comment